நிலாக் கால நினைவுகள் - 13
'மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்'
சகோதரி லதா இன்று என் நினைவுகளை மலர்விக்க நினைந்து அனுப்பிய ஒரு அற்புதமான பாடல் ! 1961 இல் வெளிவந்த 'பாசம்' திரைப்படத்தின் பல இனிமையான பாடல்களில் இது என் மனம் கவர்ந்த ஒன்று. இந்தப் படத்தை நாங்கள் பார்த்தது 1961 இல் தான் ! மறக்கமுடியுமா அந்த இனிமையான நாளை ! எம்.ஜி.ஆர் படங்களின் பாடல்கள் என்றால் அவை அமுத கானமாகத்தான் இருக்கும். பாடல்களுக்காகவே படத்தைப் பார்க்க விரும்புவேன் ! 1964 க்கு மேல் பல படங்களை மாமாவின் அலுவலகத்தில் தொழிலாளர் சங்க வளாகத்தில் பார்த்ததுண்டு. அப்படி, மாமா கூட்டிச் சென்ற ஒரு படம்தான் 'பாசம்' ! இசை மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் - ராமமூர்த்தி. பாடல் கவியரசர் கண்ணதாசன்! மேற்குறிப்பிட்ட இந்தப் பாடலைப் பாடியவர்கள் திரு.பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஜானகியம்மா ! இனிமையான குரல்கள் ! நல்ல பொருத்தம் ! இந்தப் பாடலுக்கு நடித்திருப்பவர்கள் கல்யாண்குமார் மற்றும் ஷீலா ! பொருத்தமான நடிப்பு ! விரசமில்லாத காதலை மிக அழகாக வெளிப்படுத்தும் நடிப்பு.! இன்னும் என் நினைவில் உள்ளது , ஆலம் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு இருவரும் ஆடிக் கொண்டே பாடும் வரிகள் !
'காவிரிக் கெண்டை மீன் போலே
இரு கைகள் படாத தேன் போலே
கோவில் முன்புறச் சிலை போலே
எனைக் கொஞ்சி அணைத்த வெண்மலரே '
உண்மையான காதல் பார்ப்போரின் மனதில் கண்டிப்பாக ஏற்படும்! அந்த வரிகளும் அற்புதமானவை ! கவியரசர் என்றால் கேட்கவா வேண்டும் !
மனமயக்கத்தைத் தந்தவள் நீயே வழியில் வந்தவள் நீயே' என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் 'ஆ' என்ற ஜானகியம்மாவின் ஹம்மிங்கிற்கு உயிரையே கொடுத்துவிடலாம் ! பாடல் முழுதும் நிறைய இடங்களில் இந்த ஹம்மிங்கிற்கு உள்ள அழகே தனி ! அதுவும் ஒரு இடத்தில் 'தாவி தழுவ வந்தாயே' ஆனவுடன் ஆண்குரலின் பாடல் வரிகளுடன் இணையும் விதமாக ஒரு ஹம்மிங் ! அப்போது அது ஒரு புதிய உத்தியாக மனதில் தோன்றியது !
'பூமியில் ஓடிய புது வெள்ளம் போலே
பொங்கி வந்தவன் நீயே
நெஞ்சில் தங்கி வந்தவன் நீயே
எந்தன் தலைவன் என்பதும் நீயே
தாவி தழுவ வந்தாயே '
அடுத்து வரும் கண்ணியின் தொடர்ச்சியாக உள்ள வரிகள் கனன்று கொண்டிருக்கும் உள்மனக் காதலை மென்மையாக வெளிப்படுத்துகின்றன ! கவிஞன் இங்கே வாழ்கிறான் !
'பூ மழை பொழியும் கொடியாக
பூரண நிலவின் ஒளியாக
மாமணி மாடத்து விளக்காக
மார்பில் அணைத்த மன்னவனே
என்னை மார்பில் அணைத்த மன்னவனே (ஆஹாஹா)
'திங்கள் முகத்தில் அருள் ஏந்தி - ஆஹா
செவ்வாய் இதழில் நகை ஏந்தி - ஓஹோ
இளமை என்னும் படை கொண்டு
என்னை வென்றாய் நீ இன்று
ஆஹா என்னை வென்றாய் நீ இன்று .. ஆஹா' -
இது இன்னும் அற்புதம் ! கவியரசரின் எந்தப் பாடல்தான் சோடை போனது ! போதாதா குறைக்கு இந்த மெல்லிசை மன்னர்கள் வேறு பிய்த்து வாங்குகிறார்கள் ! அது என்ன அப்படிப்பட்ட ஒரு இசை ! அனைத்தையும் விட இன்றும் மனதில் ரீங்கரித்துக் கொண்டே இருப்பது பி.பி.எஸ்.- ஜானகி இருவரின் குரல்கள்தான் ! தேன் வந்து பாயும் நம் காதினிலே ! ஒளிப்பதிவு மிகவும் அருமை இந்தப் பாடலுக்கு !
ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு படைத்திருக்கிறார்கள் இதனை ! 'யாரை எப்படிப் புகழ்வது என்று யாருக்கும் புரியலே' என்று பாடத்தான் தோன்றுகிறது !
--கி. பாலாஜி
ஆகஸ்ட் 25 2018
Comments
Post a Comment